அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பகுதியில் உள்ள அல்லிமூலை அருகில் புதிய நிரந்திர சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை மதியம் திடிரென அப்பகுதிக்கு வந்த சுமார் 15 க்கும் அதிகமான இராணுவத்தினர் நிந்தவூர் பகுதியில் உள்ள அல்லிமூலை சந்திக்கு அருகே நிரந்திர சோதனை சாவடி ஒன்றை அமைத்து சோதனை நடவடிக்கையை தொடர்ச்சியாக மேற்கொண்டுள்ளனர்.
இப்பகுதியில் இடம்பெறுகின்ற போதைப்பொருள் கடத்தல்களை முறியடிப்பதற்காக இம்முகாம் அமைக்கப்பட்டுள்ளதுடன் இடையிடையே அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் படையணி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.
இது தவிர இரவு வேளையில் ஐவர் கொண்ட இராணுவத்தினரின் குழு ஒன்று மற்றுமொரு தேடுதல் நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்து வருகின்றது.
மேலும் இவர்கள் பகல் இரவு வேளைகளில் வீதிகளில் செல்லும் சந்தேகத்திற்கு இடமானவர்கள், வாகனங்களை இடைமறித்து சோதனை செய்து பாதுகாப்பினை குறித்த பிரதேசத்தத்தில் உறுதிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கொரோனா அனர்த்தத்தின் பின்னர் மாவட்டத்தில் இடம்பெற்று வரும் கஞ்சா கடத்தல்கள், அனுமதி பத்திரமின்றி மணல் அகழ்வு போன்ற சம்பவங்களை முறியடிப்பதற்காக இந் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இது தவிர கொரோனா சுகாதார நடைமுறைகளை கண்கானித்தல் முகக்கவசம் அணியாதோரை வழிப்படுத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு விடயங்கள் உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்தும் முகமாகவும் இந்நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் மருதமுனை, கல்முனை ,நற்பிட்டிமுனை, சாய்ந்தமருது, காரைதீவு நிந்தவூர், சம்மாந்துறை, அட்டாளைச்சேனை ,அக்கரைப்பற்று ஆகிய பகுதிகளில் இருந்து இச்சந்தியில் ஊடாக பயணம் செய்பவர்கள் பரிசோதனை செய்யப்பட்டும் வாகனங்களின் இலக்கத்தகடு பதியப்பட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.